Monday, September 28, 2009

ஜினவாணி -1

ஜினவாணி (சரஸ்வதி)

உபாத்தியாயர் மற்றும் ஜினசுருதி

கல்விக்கு ஏற்றம் கொடுத்து இவ்வுலகில் மனிதம் நிலைப் பெற முயன்ற சமயங்களில் சமணம் முதன்மையானது என்றால் அது மிகையாகாது! சமணத்தில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயல்கள் புண்ணியச் செயல்களாக (நற்கட்டு) கருதப்படுகிறது. சமணகர்கள் தினம் வணங்கவேண்டிய
அரகந்தர், சித்தர், ஆச்சாரியர், உபாத்தியாயர், சர்வ சாதுக்கள், ஜின தர்மம், ஜின சுருதம், ஜின சைத்தியம், ஜின சைத்தியாலயம் என்னும் ஒன்பது தேவதைகளுள் உபாத்தியாயர் - கற்பிப்பவர் (வாத்தியார் என்று பின்னாளில் மருவியது) மற்றும் “ஜினசுருதம்” (ஆகமங்களைக் கற்றல்) என்னும் ஜினாகமங்களும் குறிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜினசுருதம், ஜினசுருதி என்ற பெயர்கள் ஜைன ஆகமங்களைக் குறிக்கும்.

ஜினசுருதம்

தீர்த்தங்கரர்கள் வாலறிவு (கேவல ஞானம்) என்னும் முழுதுணர் ஞானத்தை அடைந்தவுடன், தான் பெற்ற வரம்பற்ற அறிவையையும், உயிர்கள்
உய்ய அடைய வேண்டிய அறத்தையும் உரைக்க தேவேந்திரனால் ஏற்படுத்தப்படும் “சமவசரணம்” என்னும் அறஉபதேச மண்டபத்தில் தியான ரூபியாக எழுந்தருளுவார்கள். அப்போது அவரிகளிடமிருந்து திவ்யமயமான ஒலி பிறக்கும். இதுவே “திவ்யதொனி” எனப்படும். தீர்த்தங்கரர்கள் உதடுகள் அசையாமலே இந்த த்வனி பிறக்கின்றன. அவ்வாறு வெளிவரும் ஓசையானது கம்பிரமாகவும்,மனத்திற்கு இனிமையாகவும்,குற்றமற்றதாகவும்,பூவுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கேட்கும்படியாகவும் இருக்கும். இது தீர்த்தங்கரர்களுக்கு ஏற்படும் எண்வகை அதிசயங்களில் ஒன்று! கணதரர்கள் இவற்றின் பயன்களை பின்னர் வரும் சந்ததிகளுக்கும் பயன்படும் வண்ணம் ஆகமங்களாக தொகுத்தார்கள். அப்படித் தொகுத்த திருநாளே “சுருத பஞ்சமி” என்று குறிக்கப்படுகிறது.


சரஸ்வதி அல்லது ஆகமஸ்வரூபி

திவ்யதொனி” என்பது பெண்பால் ஈற்றுச் சொல்லாகிய இகரத்தில் முடிவதால் ஜினாகமங்களைப் பெண்ணாக உருவகம் செய்து அவற்றுக்கு ”ஜினவாணி” என்றும் ஒலியாக வெளிப்பட்டதால் “வாக்தேவி” எனவும் குறிப்பிட்டார்கள்.மேலும், ஆகமங்ள் கூறும் அறங்கள் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக கருதப்படும் நீருடன் ஒப்புமைப்படுத்தப்பட்டன. எப்படி நீர் மேட்டிலிருந்து கீழ் நோக்கி பயணிக்குமோ, உயர்ந்த உன்னத இடத்தையடைந்த தீர்த்தங்கரர்கள் வாயிலாக எளியநிலையில் உள்ள மனதர்களுக்கு அவைகள் பாய்ந்து வருவதால் அவற்றை நீருடன் ஒப்புமை பெறதக்கவகையில் “சரஸ்வதி” என்றும் அழைக்கப்பட்டது. இவ்வாகமங்கள் மனித வாழ்க்கைக்கு “ஐஸ்வர்யமாக” கருத்தட்டதால் இவை “ஜினஐஸ்வரயம்” என்றும் அழைக்கப்பட்டது.

பெண்ணாக உருவகித்தல்

நிகழ்க்கால தீர்த்தங்கரர்களில் முதல்வராகக் கருதப்படுபவர் “ஆதிநாதர்” என்று அழைக்கப்படும் “ஆதிபகவ”னாவார். இவரே முதன் முதல் எண்களையும், எழுத்துக்களையும் முறையே தம் மகள்களான பிராம்மி, சுந்தரி என்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (இன்றும் கல்வெட்டில் எழுதப்படுகிற எழுத்துக்கு “பிராம்மி” என அழைக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது) இதையே “எண்ணோடு எழுத்திரண்டும் இயம்பிய ஆதிமூர்த்தி” என்று சூடாமணி நிகண்டு குறிக்கும். இதனால் சமணம் கல்வியை பெண்ணாக உருவகப்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.

வளரும்....


இரா.பானுகுமார்,
சென்னை 44

Friday, September 11, 2009

தாமரைக் கண்ணான் உலகு!

தாமரைக் கண்ணான் உலகு



தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு – திருக்குறள் (1103)

(புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் உள்ளது)

அகத்திய குழுமத்தில் எழுதும் போது இக்குறள்ப் பற்றி விவாதிக்கப்பட்டது. குறளின் சமயத்தை இக்குறளில் ஏன் தேடுகிறார்கள் என்று நினைத்துச் சிரித்ததுண்டு :-)

நேற்று முன்தினம் நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து ”தாமரைக் கண்ணான் உலகு” பற்றிச் சொல்ல சொன்னார். ஏதோ ஒரு யாஹீ குழுமத்தில் மடலாடல் நடந்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். அவர் அப்படித்தான்! திடீரென்று கைப்பேசியில் அழைப்பார். ஏதாவது கேட்பார்? எங்காவது எழுதுகிறீர்களா? என்றால் சிரித்துவிட்டு கட் செய்து விடுவார்.


உரையாசிரியர்களின் பார்வை:

மணக்குடவர் உரை:

தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர் உரை:

தாம் வீழ்வார் மென் தோள்துயிலின் இனிதுகொல் – ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு – அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. இப்பெற்றித்தாய் துயிலைவிட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது என்னும் கருத்தால் “இனிது கொல்” என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.


(அப்பா! எப்படியெல்லாம் மழுப்புகிறார் ;-)

சமணம் சார்ந்த உரை

யான் முன்னமே சொல்லியது போல (என் மற்ற கட்டுரையைப் படிக்கவும்) மணக்குடவர் உரை சுருக்கமும், நேரிதின் பொருளும் கொண்டதாகயிருக்கிறது.

இந்திரன் உலகு


சமணக் கொள்கைப்படி, நல்வினைக்கட்டால் தேவக்கதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாக பிறந்து பலத்தரப்பட்ட சுகங்களையும் அனுபவிக்கும். அச்சுகங்களை எழுத்தில் சொல்ல முடியாது. :-) இது நிற்க!

புணர்ச்சியில் மகிழும் தலைவன், இவள் உடலைத் தழுவதால் கிட்டும் சுகத்தை விட சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகம் இனிதாக இருக்க முடியுமோ? முடியாது! என்று நினைக்கிறான்.


இப்போது சொல்லுங்கள் சுவர்க்கம் என்றால் அது இந்திரலோகமா? அல்லது திருமால் உறையும் வைகுண்டமா? நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.

வைகுண்டத்தில் ”சுவர்க்கத்துக்கு” இடம் உண்டென்றால், அது தாமரைக் கண்ணான் உலகு தான்!! ;-)

உரையின்மையா?

பரிமேலழகர் “தாமரைக் கண்ணான்” என்ற பெயர் இந்திரனுக்கு இல்லை என்ற வாதம் இங்கு நிற்காது? எங்கனமெனின், “எண்குணத்தான்”, ”அறவாழி அந்தணன்” போன்ற பெயர்கள் அருகனைக் குறிப்பதாக எல்லா நிகண்டுகளும் கூறுகின்றன? பரிமேலழகர் கூற்றை ஏற்றுக் கொண்டால், இக்கூற்றையும் தான் ஏற்றாக வேண்டும் இல்லையா?! “எண்குணத்தான்” என்ற பெயர் சிவபிரானுக்கு இன்மையினால் தானே சிவபிழம்பு என்று போற்றப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சூடாமணி நிகண்டை மாற்றி எழுத முயன்றார். சிவன் பெயர் தொகுதியில் “எண்குணத்தான்” என்ற பெயரை சேர்க்க முயன்றார்! இந்த ஒரு சான்றே போதும்!
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள குறட்ப்பாக்கள் அருகனைக் குறிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும்!

அன்பர்கள் சிந்திக்கவும்!

திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தன் கட்டுரையில் “தாமரைக் கண்ணான்” இந்திரனைக் குறிக்கின்ற சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார். பார்க்கவும்!

http://www.sishri.org/indran.html



இரா.பானுகுமார்,
சென்னை 44